Blogroll

புதன், 11 செப்டம்பர், 2013

நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்


மொபைல் போன் தயாரிப்பவராக, ஒரு காலத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வந்த, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த, நோக்கியா நிறுவனத்தின், மொபைல் போன் மற்றும் பிற சாதனங்கள் தயாரிப்பு பிரிவினை, மைக்ரோசாப்ட் சென்ற வாரம் வாங்கி யுள்ளது. தயாரிப்பு பிரிவுகள் மற்றும் காப்புரிமைகளுக்கும் சேர்த்து, மைக்ரோசாப்ட் இதற்கென 717 கோடி டாலர் வழங்குகிறது.
மொபைல் போன் தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வந்த நோக்கியா, தன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களிடம் இழந்த போது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் போன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஒதுக்கித் தள்ளி, விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனை செய்தது.
சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமாக, உலகில் முதல் இடத்தில் இயங்கும், மைக்ரோசாப்ட், இனி சாப்ட்வேர் மட்டுமே தனக்கு புகழும் பணமும் தராது என்று திட்டமிட்டு, தற்போது பெருகி வரும் ஸ்மார்ட் போன்களை இலக்கு வைத்து, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடுத்து, விண்டோஸ் 8 போன் சிஸ்டத்தினையும் வழங்கியது. பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களின் இயக்கத்தினை, ஓர் இயற்கையான ஒருங்கிணைந்த இயக்கத்தில் கொண்டு வரத் திட்டமிட்டது. மொபைல் போன் விற்பனைச் சந்தையில் தன் தடத்தினை ஆழப் பதிக்க தீவிரமாக எண்ணியது. நிதிச் சுமையில் தள்ளாடிய நோக்கியா, சரியான சந்தர்ப்பத்தினைத் தர, தற்போது அதனைத் தனதாக்கியுள்ளது.
கம்ப்யூட்டிங் வேலையைச் செய்திட வசதியான ஒரு மேடையாக மொபைல் ஸ்மார்ட் போன் தற்போது உருவாகி, பயனாளர் எண்ணிக்கையிலும் பெருகி வருவதால், சாப்ட்வேர் துறையில், உலகை வழி நடத்தும் மைக்ரோசாப்ட், அந்த மேடையைக் கைப்பற்ற நினைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதன் இலக்குக்கு ஏற்ப, நோக்கியாவின் நிலை இருந்ததால், இந்த நிறுவன மாறுதல், தகவல் தொழில் நுட்ப உலகில், இயற்கையான ஒன்றாகக் கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில், நோக்கியா முழுமையாக, மைக்ரோசாப்ட் வசம் செல்கையில், உலகெங்கும் இயங்கும் நோக்கியா தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களாக மாறுவார்கள். இவ்வகையில் 32 ஆயிரம் பேர் உள்ளனர். நோக்கியாவின் தலைமையிடமான பின்லாந்தில் மட்டும் 4,700 பேர் பணியாற்றுகின்றனர். 
பத்து ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாத இடத்தை, மொபைல் போன் சந்தையில் கொண்டிருந்தது நோக்கியா. முதலில் ஆப்பிள், அதன் பின்னர் சாம்சங் அதன் கோட்டையைத் தகர்த்தன. கொஞ்சம் கொஞ்சமாக தன் இடத்தை இழந்த நோக்கியா, தன் ஸ்மார்ட் போன்களில், தன்னுடைய சிஸ்டத்தை நவீனப்படுத்த முயற்சி எடுக்கவில்லை. மற்ற மொபைல் போன் நிறுவனங்கள் தத்தெடுத்த ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒதுக்கித் தள்ளியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சிஸ்டத்தைக் கொண்டு வந்து, இழந்த இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டது. ஆனால் அதன் நிதி வசதியும் தொழில் நுட்ப வல்லமை இல்லாத நிலையும் இடம் கொடுக்காததால், இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆசைக்கு இணங்கிவிட்டது.
சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன், மொபைல் போன் சந்தையில் போட்டியிடும் அளவிற்கு நிதிச்சுமையில், நோக்கியா தத்தளித்ததை, மைக்ரோசாப்ட் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்குமே,இந்த உடன்பாடு, அவற்றின் பிரச்னைகளைத் தீர்க்க உதவியுள்ளது. ஆனால், மொபைல் போன் வரலாற்றில், நோக்கியாவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. 
முதலில் பேப்பர் தொழிற்சாலையைத் தொடங்கி, பின்னர் எலக்ட்ரிக் சாதனங்கள், ரப்பர் பூட்கள் என விற்பனை செய்து, உலகில் அதிக ஏற்றுமதி செய்திடும் நிறுவனமாக வலம் வந்து, பின்னர் மொபைல் போனில் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது நோக்கியா. ஒரு கால கட்டத்தில், இந்த உலகம் அடுத்து எந்த மொபைல் போனை வாங்க வேண்டும் என்பதனை நோக்கியாவே தீர்மானித்தது. அத்தகைய நோக்கியாவின் 148 ஆண்டு கால சரித்திரம், தற்போது ஒரு முடிவிற்கு வந்துவிட்டது.
நோக்கியா தன் நிறுவனத்தை விற்பனை செய்தது சரியா? தவறா? என்ற கேள்விக்கு, நிறுவனத்தை விற்பனை செய்திட நோக்கியாவிற்குக் கிடைத்த கடைசி சந்தர்ப்பம் இதுதான் என்றும், இல்லையேல், நோக்கியா தரை மட்டத்திற்குத் தானாகவே சென்றிருக்கும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மைக்ரோசாப்ட் ஏன் நோக்கியாவை வாங்கியது? தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த நோக்கியாவிற்கு மைக்ரோசாப்ட் அனுமதி அளித்தது. நோக்கியா மட்டுமே, விண்டோஸ் சிஸ்டம் போன்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனமாக எழுத் தொடங்கியது. அத்துடன் பயனாளர் தேவைகளுக்கேற்ப, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாறுதல்களைச் செய்திட, நோக்கியா அனுமதி பெற்றது. இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது தன் கட்டுப்பாட்டினை இழக்கும் நிலை வந்தது. இது, மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் சரித்திரத்தில், இதுவரை சந்தித்திராத நிலையைக் காட்டியது. விழித்துக் கொண்ட மைக்ரோசாப்ட், இப்போது அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
மைக்ரோசாப்ட், நோக்கியா நிறுவனத்தை வாங்கியே ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வரக் காரணம், விண்டோஸ் இயக்கம் கொண்ட, நோக்கியாவின் ஆஷா வரிசை போன்களே. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்ற இந்த வரிசை போன்களைக் கொண்டே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேடையை பரவலாக விரிக்க இருக்கிறது.
பூஜ்யமாக இருந்த விண்டோஸ் சிஸ்டம் ஸ்மார்ட்போன் விற்பனையை, நோக்கியா 74 லட்சம் என்று உயர்த்தி, தற்போது மைக்ரோசாப்ட் கைகளில் தந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் சாதுர்யமாகக் கையாண்டு, வெற்றி ஈட்ட வேண்டும்.

நோக்கியாவின் சாதனைகள்
1871 - டயர், பூட் மற்றும் கேபிள்களைத் தயாரித்தது.
1987 - முதல் மொபைல் போன் மொபிரா சிட்டிமேன் வெளியானது எடை 1 கிலோ.
1992 - முதல் டிஜிட்டல் ஜி.எஸ்.எம். போன் நோக்கியா 1011 வெளியானது. 
2003 - பேசிக் 1100 என்ற மொபைல் போனை வெளியிட்டது. 25 கோடி போன்கள் விற்பனை செய்யப்பட்டன. நோக்கியா அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்த மொபைல் இதுதான். மக்களிடையே அதிகம் பிரபலமான எலக்ட்ரானிக் சாதனம் என்ற பெயரினைப் பெற்றது.
2011 - தன் சிம்பியன் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஒதுக்கி, விண்டோஸ் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. 
2013 - இறுதியாக 41 மெகா பிக்ஸெல் திறனுடன், நோக்கியா லூமியா 1020 என்ற போனை வெளியிட்டது. 

நோக்கியா தொடாத நபரே இல்லை
கடந்த 15 ஆண்டுகளாக, நீங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தி இருந்தால், நிச்சயம் அதில் நோக்கியா போன் ஒன்று இருக்கும். 2000 ஆம் ஆண்டில் நோக்கியா போன் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், அது நிச்சயம் நோக்கியா 5110 என்ற மாடலாகத்தான் இருந்திருக்கும். இதே போல புகழ் பெற்ற நோக்கியாவின் போன்கள் 8210, 3210 மற்றும் 3310 ஆகியவை ஆகும். 2003ல் வந்த நோக்கியா 1100 மாடல், அதிக விற்பனையை மேற்கொண்டு, சரித்திரத்தில் இடம் பெற்றது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் விற்பனை செய்யப்பட்ட மொபைல் போன்களின் எண்ணிக்கை
சாம்சங் - 10 கோடியே 75 லட்சம் - 24.7%
நோக்கியா - 6 கோடியே 9 லட்சம் - 14%
ஆப்பிள் - 3 கோடியே 19 லட்சம் - 7.3%
எல்.ஜி. - 1 கோடியே 70 லட்சம் - 3.9%
இஸட். டி.இ. - 1 கோடியே 52 லட்சம் - 3.5%
மற்ற நிறுவனங்கள் - 20 கோடியே 23 லட்சம் - 46.5%

நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

வெள்ளி, 16 டிசம்பர், 2011

இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.
கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் -- இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் -- என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை "கிளையண்ட்' என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்' என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்' என்னும் அதிவேக வழியில் செல்கிறது. இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்' என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.
நாம் ஒரு இணைய தளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது. இதற்கு புரோட்டோகால் என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர் கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை-பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி - ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.
இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஒரு ஐ.எஸ்.பி. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு. ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.

அதென்ன தகவல் பாக்கெட்?
இன்டர்நெட் என்பது "பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்' என அழைக்கப்படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் "சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்' என அழைக்கப் படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப் பட்டு அனுப்பப் படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால் சிறு சிறு பலகைகளை மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை அமைத்திருப்பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன. ஒவ்வொரு ஹெடரிலும் "செக்சம்' (Checksum) எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது.
இப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது? நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர், "டொமைன் நேம் சர்வர்' (Domain Name Server DNS) என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

பேஸ்புக் வைரஸ்

இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனம் ஒன்று, புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாகச் சென்ற வாரம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பேஸ்புக் தளத்தில் தங்கள் அக்கவுண்ட்டினைத் திறந்து வைத்து இயங்கும் நபர்களின் கம்ப்யூட்டரை இது தாக்குகிறது. ஒரு இமேஜ் பைல் போல மெசேஜ் அனுப்பப்படுகிறது. உண்மையில் அது இமேஜ் அல்ல. இதில் கிளிக் செய்தால், .scr என்ற துணைப் பெயருடன் கூடிய பைல் ஒன்று உள்ளது. இதில் கிளிக் செய்தவுடன் ZeuS crimeware என்ற வகை வைரஸ் ஒன்று உள்ளே நுழைகிறது. தற்போது இது Win32.HLLW.Autoruner.52856 மற்றும் Heure: Trojan.Win32.Generic ஆகிய வைரஸ்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் பேஸ்புக் தளத்தில் எந்த இமேஜ் பைலாக இருந்தாலும் அதில் கிளிக் செய்திடும் முன் ஒருமுறை யோசிக்கவும். 
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

புதன், 23 நவம்பர், 2011

கம்ப்யூட்டரில் பேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள டேட்டாவினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பேக்கப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கம்ப்யூட்டர் என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான். இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான பைல் களைப் பேக்கப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கிய மான பைல்கள் எவை என்று தெரிவதில்லை.
எந்தெந்த பைல்களை எல்லாம் பேக்கப் எடுக்க வேண்டும்? நீங்கள் உருவாக்கிய எல்லா பைல்களையும் (வேர்ட், எக்செல், அக்சஸ், பவர்பாயிண்ட் பைல்கள்) பேக்கப் எடுக்க வேண்டும். எழுத்து வகைகள், ஐகான்கள், கர்சர்கள், வால்பேப்பர்கள், தீம்கள், ஸ்கிரீன்சேவர்கள், எம்பி3 பைல்கள், வீடியோ பைல்கள் என இண்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்த எல்லா பைல்களையும் பேக்கப் எடுக்க வேண்டும். இமெயில்கள், இமெயில்களின் விதிகள், பேவரிட் தளங்கள், முகவரி புத்தகங்கள், நண்பர்கள் பட்டியல்கள் என இண்டர்நெட் சேவைகள் தொடர்பானவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். இவற்றை பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

உங்களது பைல்கள்:
எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல் போன்ற பெரும்பாலான அப்ளிகேஷன்கள் வழியாக நீங்கள் உருவாக்குகிற பைல்களை My Documents என்ற போல்டரில்தான் கம்ப்யூட்டர் சேமிக்கும். எனவே இந்த போல்டரைப் பேக்கப் எடுக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் படங்களை My Pictures போல்டரிலும், ஆடியோ பைல்களை My Music போல்டரிலும், வீடியோ பைல்களை My Video போல்டரிலும் போட்டு வைக்கும். இந்த போல்டர்கள் எல்லாமே My Documents போல்டரின் கீழ்தான் வருகின்றன. எனவே My Documents போல்டரை பேக்கப் எடுத்தால் இவையும் தாமாகவே பேக்கப் ஆகிவிடும்.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் செட்டிங்:
மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறவர்கள் பல செட்டிங்களை அங்கு கொடுத்திருக்கலாம். மெனு, டூல்பார், டெம்ப்ளேட் போன்ற செட்டிங்கள், இமெயில் விதிகள் எனப் பலவற்றை பேக்கப் எடுக்க Save My Settings Wizard என்ற ஒன்றை ஆபீஸ் எக்ஸ்பி தந்துள்ளது. ஆபீஸ் எக்ஸ்பி சிடி டிஸ்க்கில் உள்ள இதை நிறுவினால் மைக்ரோசா ப்ட் ஆபீஸ் தொடர்பான எல்லா செட்டிங்குகளையும் பேக்கப் எடுக்கலாம்.

எழுத்து வகைகள்:
பல அப்ளிகேஷன்களை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவும் பொழுது அவை தங்களுக்கு வேண்டிய எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி இருக்கும். இண்டர்நெட்டில் இருந்து பல எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுன்லோடு செய்திருப்பீர்கள். C:/windows போல்டரின் கீழ் Fonts என்ற பெயரில் உள்ள போல்டரில்தான் எல்லா எழுத்து வகைகளும் காணப்படும். இதை பேக்கப் எடுங்கள்.

இன்டர்நெட் விவரங்கள்:
இன்டர்நெட் வெப் தளங்களில் நீங்கள் நுழைந்தவுடன் இந்த தளங்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆவல் பிறக்கலாம். அப்படிப்பட்ட தளங்களை நினைவில் வைத்துக் கொள்ளும்படி பிரவுசருக்கு தெரிவிக்க முடியும். இதற்காகவே Bookmarks அல்லது Favorites என்ற மெனு பிரவுசரில் காணப்படும்.
பிரவுசருக்கு அடையாளம் காட்டப்பட்ட வெப் தளங்களின் பட்டியல் Bookmarks அல்லது Favoritesல் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த பட்டியலை பேக்கப் எடுக்க வேண்டும். எப்படி பேக்கப் எடுப்பது என்பது பிரவுசரை பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் File=>Import and Export கட்டளை மூலம் அந்த பேவரிட் பட்டியலை ஒரு பைலில் சேமித்து பின்பு அந்த பைலை பேக்கப் எடுக்க வேண்டும்.
உங்களுக்கு வந்துள்ள இமெயில்களை நீங்கள் பேக்கப் எடுக்க வேண்டும். மேலும் உங்கள் இமெயில் அக்கவுண்ட் பற்றிய விவரங்கள், முகவரி புத்தகம், இமெயில் வடிகட்டல் விதி, சிக்னேச்சர் போன்றவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் புரோகிராமில் எப்படி பேக்கப் எடுப்பது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்.
விண்டோஸின் Find அல்லது Search கட்டளை மூலம் BMP, JPG, JPEG, GIF, SCR, WAV, MDI, MP3, MPG, DAT போன்ற பைல்கள் கம்ப்யூட்டரில் எங்குள்ளன என்று தேடி அவற்றை பேக்கப் எடுப்பது நல்லது. 
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

கம்ப்யூட்டரில் தகவல்கள் திருட்டு

நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல்களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன. சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன் படுத்துகின்றன.
நம் கம்ப்யூட்டரில் நமக்குத் தெரியாமல் நம் செயல்பாடுகள் கண்காணிப்பதற்கு புரோகிராம்களா எனக் கவலைப்படுகிறீர்களா? இவை அவ்வளவு ஒன்றும் நீங்கள் எண்ணும் அளவிற்கு மோசமானவை அல்ல. இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் குறித்து பல மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உலவி வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து இங்கு காணலாம்.
1. ஒரு சில நிறுவனங்களே இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் கம்ப்யூட்டர்களில் அவர்கள் தேடலைப் பற்றி அறிய குக்கீஸ் களை அனுப்புகின்றன. இது உண்மைக்கு மாறான தகவல். 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலையில் ஈடுபடுகின்றன. Adfonic, Clicksor, or VigLink என்ற பெயர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை. ஆனால் அவை உங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். இவை எல்லாம் இணையச் செயல் பாட்டினைக் கண்காணிக்கும் வகையில் (Web tracking) செயல்படுபவை.
2. இந்த கண்காணிக்கும் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய அனைத்து தகவல் களையும் அறிந்து வைத்துள்ளன. இது பொய். இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவது இல்லை. உங்கள் பிரவுசர்கள் இயங்கு வதைத்தான் கண்காணிக்கின்றன. அந்த பிரவுசரை மற்றவர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பயன் படுத்துகையில் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பில்லையே. மேலும், நீங்கள் மற்றொரு பிரவுசரைப் பயன்படுத்து கையில் உங்கள் தேடல்கள் என்ன வென்று அறியவும் சந்தர்ப்பம் இல்லை. பொதுவாக இவை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பத் தேடல்களை அறிவதில்லை. ஒவ்வொரு கம்ப்யூட்ட ருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பதிவு செய்து, அந்த எண்ணின் அடிப்படையில் தான் தகவல்களைச் சேகரிக்கின்றன.
3. இணையக் கண்காணிப்பு புரோகிராம் கள் உங்கள் தனிநபர் விருப்பங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்கு நீங்கள் யார் என்பது தெரியாது. இதில் பாதி உண்மை; பாதி உண்மை அற்றது. நீங்கள் இணையத்தில் கிளிக் செய்திடும் தளங்களுக்கான லிங்க்ஸ் பற்றி தகவல்கள் சேர்க்கப் படுகையில், உங்களின் தனி நபர் விருப்பங்கள் பட்டியலிடப்பட்டு தொகுக்கப்படுகின்றன. உங்களை அடையாளம் காட்டும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவையும் அவற்றின் வசம் கிடைக்கின்றன. எனவே ஓரளவிற்கு உங்கள் விருப்பங்களும் இந்த குக்கீஸ் மூலம், அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்குச் செல்கின்றன. ஆனால் இந்த நிறுவனங்கள் தனிநபர் விருப்பங்களைப் பயன்படுத்துவதில்லை. எத்தகைய தகவல்கள் மற்றும் விளம்பரங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதை மட்டும் கணித்து அவற்றை வேண்டுவோருக்கு அளிக்கின்றன.
4. இவற்றைத் தடை செய்திட சட்டத்தில் இடம் உள்ளது. இது உண்மை அல்ல. இணையத்தில் இத்தகைய செயல்பாடு களைத் தடை செய்திடும் சட்டம் இல்லை. அப்படியே வேறு சட்டப் பிரிவுகளுக்குள் இந்த செயல்பாட்டினைக் கொண்டு வந்தாலும், இதனை நிரூபிப்பது கடினம்.
5. மொபைல் போனில் இருப்பது போல, எனக்கு விளம்பரங்கள் வேண்டாம் எனத் தடை செய்திட முடியுமா? அந்த வசதி இல்லை. இணையக் கண்காணிப்பில் இருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளும் வசதி இல்லை. ஆனால், இத்தகைய குக்கீஸ்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றை உங்கள் அனுமதி யுடன் நீக்கும் புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து அவ்வப் போது இயக்கினால், நாம் இதிலிருந்து மீளலாம்.
6. இந்த கண்காணிக்கும் புரோகிராம்களைத் தடை செய்தால், இணையத்தில் விளம்பரங்கள் மறையும். வருமானம் குறைவதால், ஒவ்வொரு இணைய தளத்தினையும் பணம் செலுத்தித்தான் பார்க்க வேண்டும். இதுவும் தவறான ஒரு கருத்தாகும். இது விளம்பரங்களை அனுப்பிப் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் இட்டுக் கட்டிய கதை. விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கும் இன்டர்நெட் தொடர்ந்து இயங்குவதற்கும் அப்படிப்பட்ட ஓர் அடிப்படையான அமைப்பு இல்லை.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

Site Counter

free counters

Ads

Friends activity

Free Mp3 downloads

Instant Videos

Blogger Themes

Make Money Online

Affiliate Program ”Get Money from your Website”

டாப் தமிழ் வலைப்பூ இணைப்பு

Make a traffic

Lot of Visitors

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More